Monday 30 November 2015





பொறுமை அருளும் சமாதானம்
ரோமர் 15 : 1-7

ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாத்தியர் 5:22 ல் குறிப்பிட்டுள்ளபடி, நீடிய பொறுமை என்பது ஆவிக்குரிய கனிகளில் ஒன்றாகும். யோவான் 15-ம் அதிகாரத்தை நாம் படிக்கும்பொழுது நாம் கனி கொடுக்க வேண்டுமென்றே கடவுள் நம்மைத் தெரிந்துக் கொண்டிருக்கிறார், ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

கீழ்க்காணும் தலைப்புகளில் நாம் தியானிக்கப் போகும் காரியங்கள் பொறுமை என்னும் கனியின் இனிமையை நமக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.

1. மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்:

நாம் நன்றாய் அறிந்திருக்கிறபடியே, நமது வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் நம் விருப்பத்தின்படி மாற்றி விட முடிவதில்லை.  நமது விழைவுகளை   நிறைவேற்றிக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சிகள் தேவ சித்தத்துடன் ஒத்துப் போனால் நிறைவேறுகிறது.  இல்லையேல் இல்லை. ஜெயித்து விட்டால் ‘என் புத்தி, யுக்தியால் ஜெயித்தேன்’ என்று சொல்லி இறுதியாக போனால் போகிறது என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். காரியம் பலிக்காவிட்டால், அப்பொழுது நமது செயல் திறமின்மையை மறந்துவிட்டு, கடவுளிடம் குறைபட்டுக் கொள்கிறோம். நாம் காரிய சமர்த்து உடையர்வர்களாக இருக்கக்கூடும் ஆனால் காரிய சித்தி கர்த்தரால் வருகிறது. ‘ஒன்றை ஆக்குதல், மாற்றுதல், அழித்தல் இவையெல்லாம் நம் செயலல்ல’ என்பதை உணர்தலே முதிர்ச்சியின் அடையாளம்.  நம்மால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு பொறுமை மிகவும் அவசியமாகிறது.

தூத்துக்குடி முத்துக் குளித்தல் தொழிலுக்கு பேர் போனது. முத்து எப்படி உருவாகிறது தெரியுமா? முத்துச்சிப்பிக்குள் ஒரே ஒரு மணல் துகள் நுழைந்துவிடும். நம் கண்ணில் மணல் விழுந்தால் எப்படி கரிக்குமோ அப்படிதான் சிப்பிக்கும் வேதனை.  ஆனால், அப்படியே பொறுமையாக இருந்து, ஒரு விதமான திரவத்தை சுரக்கச்செய்து அந்த மணல் துகளை மூடுகிறது. அதுவே பிறகு விலையுயர்ந்த முத்தாகிறது.  (யாக்கோபு 1:2-4)

2.  தடைக்கற்களைப் படிக்கற்களாக்குங்கள்:

நரகத்துக்குப் போகிற ஆட்களின் பட்டியலில் முதலாவதாக வருபவர்கள் பயப்படுபவர்கள்தான்.  (வெளி.21:8)  பூரண அன்பு பயத்தை புறம்பேத் தள்ளுகிறது.  படகில் தூங்கிக் கொண்டிருந்த இயேசுவை எழுப்பிய சீடர்களை நோக்கி ‘ஏன் பயந்தீர்கள்’ எனக் கேட்டார் அல்லவா? பயம் என்கிற என்ற வார்த்தைக்கு அவர் பிரயோகம் செய்த சொல் மிகவும் கடுமையானது என வேத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பிரச்சினை அல்லது போராட்டம் வந்தால் மன தைரியத்துடன் அதை எதிர் கொள்ள வேண்டும். ‘என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவாலே எதையும் செய்ய எனக்கு திராணி உண்டு என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.  வேதத்தில் நாம் காண்கின்ற தேவ மனிதர்களெல்லாம் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல, செயல் வீரர்கள்.  ஆகவே, நாமும் நம் வாழ்வில் எதிர்ப்படுகிற சோதனைகளை கிறிஸ்துவின் துணையோடு எதிர்கொண்டு ஜெயம் பெற வேண்டும்.


3. பொறுமையை அணிகலனாக அணிந்துக் கொள்ளுங்கள்:

‘உறையும்வரைக் காத்திருந்தால் சல்லடையில் கூடத் தண்ணீரை அள்ளலாம்’ என்பார்கள்.  ஆனால், நமது ஜெபம் எப்படி இருக்கிறது? ‘கடவுளே, எனக்குப் பொறுமையைத் தாரும், இப்பவே தாரும்’!  அதுவும் இந்த அவசர யுகத்தில் எதற்கும் யாருக்கும் பொறுமையில்லை. யோபுவின் பொறுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற யாக்கோபு, பொறுமையைக் குறித்து விஸ்தாரமாக எழுதுவதை 5: 7-11 வசனங்களில் பார்க்கிறோம்.  சங்கீதம் 40:1 –ல் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்த தாவீதுக்குக் கிடைத்த நன்மையைப் பார்க்கிறோம்.  நாம் பொறுமையிழக்கும் சந்தர்ப்பங்களை சற்று கவனித்துப் பார்த்தால், எப்போதெல்லாம் நமது ஈகோ பாதிக்கப் படுகிறதோ, எப்போதெல்லாம் நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டியது மறுக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் நமது பொறுமை காணாமல் போய்விடுகிறது.  கடவுளுக்கு ஏற்ற காலத்தில் நேர்த்தியாக செய்து முடிக்கும் தேவன் என்று ஒரு பெயர் இருக்கிறது. (பிர. 3:11) அவர் நமக்குத் தர நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது. எனவே, ஏற்ற காலத்தில் நமது தேவனாகிய கர்த்தர் நம்மை உயர்த்தும் வரையில் அவரது பலத்த கரத்துக்குள் அடங்கியிருப்போம். கர்த்தர் சீக்கிரமாகவே நமக்கு நியாயம் செய்வார்.

No comments:

Post a Comment