Sunday 8 November 2015

You are the light of the world

Dear viewers,

இன்று 'நீங்கள்   இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் ' என்ற  தலைப்பில் அருளுரை ஆற்ற கடவுள் கிருபை செய்தார். தலைப்பு  எளிமையானது போலத் தோன்றினாலும் தயார் செய்வதற்குள் பிராணன் போய் விட்டது . ப்ளாகில் கமெண்ட் செய்வது கடினம் தான். எனவே,face book சென்று எனக்கு message வழியாக உங்கள் விமர்சனங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .
நன்றி

உலகத்தின் வெளிச்சம் நீங்கள்
வேத பாடங்கள்:  (1`)  சகரியா 4:1-14,  (2) 1கொரி.3:10-15,  (3) மத்.5:14-16
இவ்வுலகத்துக்கு ஒளியாய் வந்த அருள் நாதர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  வேதாகமத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உருவகம் வெளிச்சம்.  அறிவு வெளிச்சமென்றால், அறியாமை இருளாகும்.  இங்கே வெளிச்சம் என்பதன் பொருள் ‘இயேசுவை அறிந்துக் கொள்ள உலகுக்கு வழங்கப்படும் வாய்ப்பு’ என்பதாகும்.  கடவுளைக் குறித்த அறிவைப் பொறுத்த வரையில் உலகம் இன்னும் இருளில்தான் இருக்கிறது.  அவ்விருளை நீக்கி, கடவுளை நோக்கி வழி நடத்தும் வெளிச்சமாயிருப்பதே நமக்குக் கொடுக்கப் பட்டுள்ள அழைப்பு. 
  நாம் இவ்வுலகத்திற்கு வெளிச்சமாக இருப்பதன் வாயிலாக  இயேசு எந்த நோக்கத்துக்காக இவ்வுலகத்துக்கு வந்தாரோ அந்த நோக்கத்தை நிறைவு செய்கிறோம்.  யோவான் 1:9, 8;12,  12;46
ஒளி வீசி எரிய வேண்டிய விளக்கு மறைத்து வைக்கப் பட்டால், எதற்காக அது ஏற்றப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.  நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்ற ஆண்டவர், உடனேயே, ‘மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது என்கிறார்.  இயேசுவின் நாட்களில் கட்டப்பட்டப் பட்டணங்களெல்லாம் மலைகளின்மேல் கட்டப்பட்டவையே.  பல மைல் தூரத்திலிருந்தும் அவற்றைப் பார்க்கலாம்.  இயேசுவை ஒருவன் ‘நல்ல போதகர்’ என்றதில் அர்த்தமில்லாமல் இல்லை.  தாம் வாழ்ந்த நாட்டில், ஊரில் மக்கள் எவற்றைக் கண்டு வந்தனரோ, எவையெல்லாம் அவர்களுக்கு மிக அறிமுகமானவையோ, அவற்றை உதாரணங்களாகக்  கொண்டே அவர் அவர்களுக்குப் போதித்து வந்தார்.  சுளகு, உப்பு, விளக்கு, ஆடு, திராட்சை செடி, சீசரின் நாணயம் ஆகிய இவையெல்லாம் அவருடைய teaching aids!  மத்தேயு 5:15 ல் அவர் பயன்படுத்தும் மரக்காலும் யாவருக்கும் நன்றாக அறிமுகமானப் பொருள்தான்.  எரிந்து பிரகாசிக்க அழைக்கப் பட்டவர்கள் மரக்காலுக்குள் மறைந்து கொள்வது அபத்தமாயிருக்குமே.
இப்போது காலம் இருக்கிற இருப்பில் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதற்கே பயமாகத்தானிருக்கிறது. ஆனால், நமக்கு முன் இந்த விசுவாசப் பாதையில் நடந்து சென்றவர்கள்  நம்மைவிட மிக அதிகமான நெருக்கங்கள் மத்தியிலும் எரிந்து பிரகாசித்திருக்கிறார்கள். ‘ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு, உலகத்திலே  சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றப் பிள்ளைகளுமாயிருக்க வேண்டுமென பவுலடியார்  எழுதுகிறார். (பிலிப்.2:14-15) நமக்கும் நமதாண்டவருக்கும் உள்ள ஐக்கியத்தை உலகம் அறியாவிட்டல், நாம் இங்கே இருப்பதன் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும்.  (மத். 5:16)  நமது நற்கிரியைகளைக் கண்டு பிறர் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். மார்டின் தே போரஸ் என்னும் ஒரு புனிதரின் நற்பண்புகளைக் கண்ட ஒருவர், ‘இவரே இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே, இவர் ஆராதிக்கும் இயேசு எவ்வளவு நல்லவராயிருப்பார்’ என்று சொல்லி தம் வாழ்வை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தாரம்.  ‘என்னைக் காண்போர் உம்மைக் காண உமது சாயல் என்னில் வேண்டும்’ என்பதே நமது வேண்டுதலாயிருக்க வேண்டும்.
செய்ய வேண்டியவை என்ன?
வீட்டிலும், ஊரிலும் செல்லுமிடமெங்கும் வெளிச்சம் வீசுபவர்களாக இருக்க வேண்டும். 15 –ம் வசனத்தின் பிற்பகுதியை மீண்டும் படியுங்கள்:  முதலில் வீட்டில் உள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்க வேண்டும்.  மகாத்மாக்களோடு சொர்க்கத்தில் வேண்டுமானால் இருக்கலாம், ஒரே வீட்டில் குடித்தனம் செய்ய முடியாது’ என்று சொல்வார்கள். மிஞ்சின நீதிமானாயிராதே என்றுதான் வேதமும் சொல்கிறது.  ஒரு சராசரி மனிதனாக  நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பில் உண்மையும் உத்தமமாயும் நடக்கும்பொழுது  நம் வீட்டார்  நம் வெளிச்சத்தில் வெளிச்சம் காண்பார்கள். அதேபோல்தான் பணித்தளத்திலும், சமுதாயத்திலும் எளிய, இனிய சாட்சியான வாழ்க்கையால் பிறரை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம்.  உலகத்துக்கு ஒத்த வேஷமும் தரிக்கக்கூடாது, உலகத்தைவிட்டு நம்மை தனிமைப் படுத்திக் கொள்ளவும் கூடாது. இவ்வளவு நெறி பிறழ்ந்த உலகில் இவரால் செம்மையாக வாழமுடிகிறது என்றால் நாமும் ஏன் இவர் ஆராதிக்கும் இயேசுவை ஏற்றுக் கொண்டு இவரைப்போல் வாழக்கூடாது என்ற தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் எரிந்து பிரகாசித்தல் என்பது.
புறவினத்தினர் நடத்திய பள்ளி ஒன்றில் கிறிஸ்துவராகிய ஆசிரியர் ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்தார். நீங்கள் எவரிடமும் உங்கள் மதத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு வேலை அளிக்கப்பட்டது. அவரும் இயேசுவைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.  ஆனால், அவர் வாழ்க்கையைப் பார்த்து அனேகர் இயேசுவை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.  உன் கதை என்ன என்று ஒருவேளை நீங்கள் கேட்கக்கூடும். பள்ளியில் நடக்கும் அக்கப்போர் எதுவும் என் காதுக்கு வராது.  ஆனால், நண்பர்களின் குடும்ப மற்றும் அந்தரங்கமான பிரச்சினைகளுக்கு என் ஆலோசனைகளையும், உதவியையும், ஜெபத்தால் தாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் என்னிடம் கொண்டு வருகிறார்கள்.
உலகத்துக்கு உப்பாக இருங்கள் என்ற ஆண்டவர் அடுத்ததாக ஒளியாக இருங்கள் என்று கூறுகிறார்.  உப்பு உணவில் கலந்து கரைந்து மறைந்து விடுகிறது. சுவையூட்டுகிறது; உணவு கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது.  ஆனால்,ஒளியின் செயல்பாடுகள் வெளிப்படையானவை.  ‘அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.(சங்.19:6) 
இருட்டில் மறைந்து கொள்ளுதல்:
இருட்டிலிருப்பது வேறு, இருட்டில் மறைந்து கொள்வது வேறு. யோவான் 3: 19-21 வசனங்களில் இத்தகையவர்களைப்பற்றி இயேசு குறிப்பிடுகிறார்.  இருள் என்பது இயற்கையான ஒன்றுதான்.  ஆனால், கடவுள் வெளிச்சத்தை உண்டாக்கினார், அது நல்லது என்றும் கண்டார். (ஆதி. 1:2-4) நல்லோர் தீயோரின் வாழ்க்கைப் பாதைகளை ஒப்பிட்டுப்பார்க்கும் ஞானி, நடுப்பகலில் ஒளிரும் கதிரவனையும், காரிருளையும் உவமைகள் ஆக்குகிறார்.  (நீதி. 4:18,19) “உங்கள் இறை நம்பிக்கையை மெச்சுகிறோம். அதே வேளையில் எங்களுக்கு நலமாகத் தோன்றுவதை பின்பற்றுகிறோம்’ என்று அறிவார்ந்த பதில் கூறிவிட்டு இருட்டுக்குள் தங்களை முக்காடிட்டு மறைத்துக் கொள்பவர்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
இத்தகையச் சூழலில்தான் இயேசு நம்மை நோக்கி, “நீங்கள் இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்” என்கிறார்..  யோவான் 9:5-ல் தம்மை இவ்வுலகத்திற்கு ஒளியாயிருப்பதாகக் கூறியவர், இப்பொழுது அதே வார்த்தைகளை நம்மை நோக்கிக் கூறுகிறார்.  ஆண்டவர் நம்மை பலவாறாக பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்: ஆடுகள், திராட்சை கொடிகள், சினேகிதர்கள்,... எல்லாமே சிலாக்கியமானவைதான்.  தம்மைக் குறிப்பிட்டுச் சொன்ன அதே உருவகத்தால் நம்மையும் அழைப்பது இன்னும் மேலான சிலாக்கியம் என்றே கருதுகிறேன்.  அதே வார்த்தையை ஒரு வேளை ஆண்டவர் சொல்லாமல் நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம் என வைத்துக் கொள்வோம். எப்படி இருக்கும்? மேட்டிமையின் உச்சமே அதுவாகத்தானிருக்க முடியும்.  எபேசியர் 5:8-ல் பவுல் எழுதுகிற இந்த வார்த்தைகளைப் பாருங்கள்: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள்.  அந்தகாரத்தில் இருந்தீர்கள் என்று எழுதவில்லை, அந்தகாரமாகவே இருந்ததாக எழுதுகிறார்.  அதே போல் இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்கிறார். வெளிச்சத்தில் இருப்பவர்கள் அல்ல, வெளிச்சமாகவே இருப்பவர்கள்!
ஒரு கண்ணடி தன்முன் வந்து நிற்பவரை அப்படியே பிரதிபலிக்கிறது. அது போலவே விளக்கும் அது இருக்கும் இடத்தில் இருக்கிற யாரையும், எதையும் இருக்கிறவண்ணமாகவே காட்டுகிறது. ஒளி வாழ்வின் ஆதாரமாக இருக்கிறது.  நமது, பேச்சு, செயல்கள், வாழ்க்கைமுறை யாவுமே நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும்.
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடும் பழக்கம் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது.  ‘ஐயோ, இல்லையே’ என்கிறீர்களா? பலவகையான மரக்கால்கள் இருக்கின்றன. ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்:
1. கோழழைத்தனம் என்ற மரக்கால்: யோவான் 19:38-ல் நாம் காண்கிற யோசேப்பு இந்தவகையைச் சேர்ந்தவர். அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது.  ஆனால், ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது.
2.  நிர்விசாரம்:  யார் என்ன ஆனால் என்ன? எங்கே எது நடந்தால் என்ன?  நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று யோசுவாவின் விசுவாசப் பிரகடனத்துக்கு, அவர் கனவிலும் எண்ணியிராத புதிய பொழிப்புரையை எழுதுபவர்கள் இவர்கள். செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் காணும் எந்த செய்தியும் இவர்களது ஜெபக்குறிப்பாக மாறுவதே இல்லை. தேசத்துக்காக, மக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபம் செய்து அறியாதவர்கள்.
3.  கிறிஸ்தவர்கள் அடக்கமானவர்கள் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள்:  அடக்கமானவர்கள்தான், ‘அடக்கம்’ செய்யப்பட்டவர்கள் அல்ல. சோதோம், கொமோராவில் குடி புகுந்த லோத்து, அந்த மக்களின் வாழ்வு முறையைக் கண்டு, ஒன்று ஓடி வந்திருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் அவர்களது அக்கிரமச் செய்கைக் குறித்து கண்டித்து உணர்த்தியிருந்திருக்க வேண்டும்.
மாற்கு 7:24-ல் ஒரு சுவரஸ்யமான விஷயம் இருக்கிறது பாருங்கள். அவர் தம்மை மறைத்துக் கொள்ள விரும்பியும் கூடாமற்போயிற்றாம்.  ஏனெனில், அவர் பூமியில் இருந்த நாட்களில் நடுப்பகலில் நாம் காணுகின்ற சூரியனைப் போலிருந்தார். அவரைப் போல பிரகாசிக்கவே நாமும் அழைக்கப்படுகிறோம்.
முடிவுரை:
தியாகத்தின் அடையாளமாக மெழுகுவர்த்தியைக் குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட மெழுகுவர்த்தியைப் போன்றவர் யோவான் ஸ்நானகன். ‘அவர் பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும்’ என்று சொல்லி தம்மை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து நமக்கும் நல்ல முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிற அவரைப் போலவே, நாமும் இவ்வுலகில் ஒளிவீச இறைவன் தயை செய்வாராக.
  

No comments:

Post a Comment